Saturday 16 September 2017

நீச்சல் தெரியாத நீர் யானை


    நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய விலங்கு நீர்யானை. இதற்கு தனி ஈர்ப்பு விசை உண்டு. அதனால் நீர் யானை நீரின் அடியில் நடக்கவும் ஓடவும் முடிகிறது. உப்பு இல்லாத ஏரிகளிலும், ஆறுகளிலும் வாழக்கூடியது. பகலில் தண்ணீர் அல்லது சேற்றில் வசிக்கும். வெப்பத்தால் உடல் உலர்ந்து போகாமல் பார்த்து கொள்ளும். இரவு நேரங்களில் நீரை விட்டு வெளியே வந்து மேயத் தொடங்கும்.

    நிலப்பரப்பில் உள்ள புற்கள் தான் இவற்றின் பிரதான உணவு. 4 முதல் 5 மணி நேரம் வரை இவை புற்களை மேயும். ஒரு இரவில் மட்டும் 68 கிலோ எடையுள்ள புற்களை வயிற்றில் நிரப்பி கொள்ளும் சக்தி கொண்டது. நீர்த்தாவரங்களை இவை சாப்பிடுவதில்லை. இவை நீருக்கடியில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நடக்கும். குட்டி நீர்யானைகள் எப்போதும் நீருக்கு மேலேயே மிதந்து கொண்டிருக்கும்.

    பெரிய நீர்யானைகள் 3 அல்லது 5 நிமிடங்களுக்கு ஒரு முறையும், குட்டிகள் 2 அல்லது 3 நிமிடங்களுக்கு ஒருமுறையும் சுவாசிக்கும். நீருக்கடியில் இவை தூங்கிக் கொண்டிருந்தாலும் கூட கண் விழிக்காமலே நீரின் மேற்பகுதிக்கு வந்து மூச்சுக்காற்றை வாங்கிக் கொண்டு மீண்டும் நீருக்கு அடியில் சென்று விடும். இவையெல்லாம் தானியங்கி முறையில் தானாகவே நடக்கும். நீருக்கடியில் செல்லும் போது மூக்கு துவாரங்கள் தானாக மூடிக் கொள்ளும்.

    நீரிலே வாழ்ந்தாலும் கூட நீர்யானைகளுக்கு நீச்சல் தெரியாது. தங்களிடம் உள்ள சிறப்பு ஈர்ப்பு விசை காரணமாக தண்ணீருக்கு அடியில் செல்லும் பின் மேலே வரும்.

    பெண் நீர் யானைகள் 4 முதல் 5 வயதில் வயதுக்கு வருகின்றன. ஆண் நீர்யானைகள் 7.5 வயதில் பருவம் எட்டி விடும். பெண் நீர்யானைகள் 8 மாதங்களில் குட்டி ஈனும். பிறக்கும் குட்டி 25 முதல் 45 கிலோ எடை இருக்கும். பெண்யானை பிரசவத்தின் போது ஒரு குட்டியைத் தான் ஈனும். பின் 17 மாதங்கள் கழித்து தான் அது மீண்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும்.

    நீர்யானை 15௦௦ முதல் 3 ஆயிரம் கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். மணிக்கு 3௦ கி.மீ. வேகத்தில் நிலத்திலும், 8 கி.மீ. வேகத்தில் நீருக்கடியிலும் ஓடக்கூடியது. மிகவும் மூர்க்கத்தனமான விலங்கு இது. ஆப்பிரிக்காவில் மட்டும் 1.5௦ லட்சம் நீர்யானைகள் இருப்பாதாக கூறப்படுகிறது. உகாண்டா, சூடான், சோமாலியா, கென்யா, காங்கோ, எத்தியோப்பியா, கானா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, சஹாரா, ஜாம்பியா, தான்சானியா ஆகிய நாடுகளில் இந்த விலங்குகள் அதிகமாக இருக்கின்றன. வேட்டையாடுதல், காடுகளை அழித்தல் போன்ற நடவடிக்கைகளால் இந்த உயிரினம் வேகமாக குறைந்து வருகிறது.

No comments:

Post a Comment