Monday 16 April 2018

பச்சை பால் விற்றால் சிறை தண்டனை



   நமது நாட்டில் பால் விற்பது என்றால் அது பச்சைப் பால் விற்பதைத்தான் குறிக்கும். காய்ச்சிய பால் எங்கும் விற்கப்படுவதில்லை. கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் பிரயாணத்தின் போதும் அவசரத் தேவைக்காக காய்ச்சிய பாலை டீ கடைகளிலும், ஓட்டல்களிலும் வாங்குவார்கள். இந்த இரண்டு இடங்களில் தான் காய்ச்சிய பால் கிடைக்கும். மற்ற இடங்கள் எல்லாவற்றிலும் பச்சைப்பால்தான். ஆனால் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் காய்ச்சிய பால்தான் கிடைக்கும். அங்கு பச்சைப்பால் விற்பது குற்றம். மீறி விற்றால் சிறை தண்டனைதான்.

   ஜேம்ஸ் ஸ்டூவர்ட், ஷரோன் பால்மர், விக்டோரியா ப்ளோச் ஆகியோரை பச்சைப் பாலை விற்றதாக சிறையில் தள்ளி, பல கொடுமைகளை செய்துள்ளது, கலிபோர்னியா மாகான அரசு.
    ஜேம்ஸ் ஸ்டூவர்ட், என்பவர் ராவேசம் புட்ஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவர் பெர்மா கல்சார் என்ற முறையில் விவசாயம் செய்து வருகிறார். புத்தம் புது காய்கறிகள், பழங்கள், உணவு பண்டங்களை சாப்பிடுவதுதான் உடல் நலத்துக்கு ஆரோக்கியம் என்ற கொள்கையை பரப்பி வருபவர். இந்த கொள்கையை கொண்ட அவருடைய வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டுத்தான் பச்சைப் பாலை வாங்கி குடித்தனர். இவரிடம் பச்சை பால் வாங்குவதகு அங்கு கடும் போட்டியே நிலவும். பச்சைப்பால் குடிப்பவர்கள் அங்கு தனி அமைப்பையே உருவாக்கி இருக்கிறார்கள்.
   பச்சைப் பால் மருத்துவ குணமுள்ளது. அதை குடிப்பதால் பல நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது. அக்கி போன்ற நோய்க்கு இணையான லைமி என்ற நோய், பச்சைப் பாலை குடித்தால் குணமாகிவிடும் என்று அமெரிக்காவில் நம்பப்படுகிறது. இந்த சூழலில்தான் பச்சைப் பால் விற்பனை செய்வது குற்றம் என்று சொல்லி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
   பச்சை பால் விற்பது குற்றமா? குற்றம் இல்லையா என்பதைக் காட்டிலும் அதை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிரான விஷயம் என்பதில்தான் பிரச்சினையே தொடங்கியது. இந்த நிறுவனங்கள், “பச்சைப் பால்லில் உள்ள பல பாக்டீரியாக்கள், பாலை உண்பவர்களுக்கு நோயை தரலாம்” என்று கூறி பதப்படுத்தப்பட்ட பாலை மட்டுமே விற்க வேண்டும் என்கிற சட்டத்தை உருவாக்கி வைத்துள்ளன. பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களின் வணிக நலனுக்கு மாறாக நடக்கும் எதையும் பொருத்துக் கொள்வதில்லை என்ற எண்ணம் தான் பச்சைப்பால் விற்றவர்கள் மீது கொடூர நடவடிக்கைக்கு காரணமாகி விட்டது.
    பச்சைப்பால் பிரச்சினை அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் பச்சைப்பால் விற்பனைக் களை கட்டிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment