Tuesday 24 March 2020

எலும்பு முறிவுக்கான முதலுதவி சிகிச்சை

              பலமான தாக்குதலின் காரணமாக எலும்பில் கீறல் அல்லது முறிவு உண்டாகலாம். எனினும், எளிதில் உடைந்து விடக்கூடிய அளவிற்கு எலும்புகள் மென்மையானவை அல்ல. ஆனால், வயோதிகத்தின் காரணமாகவோ, நோயின் காரணமாகவே எலும்புகள் பலவீனமடையும், இற்றுப்போகும். குழந்தையின் எலும்புகளோ மிருதுவாகவும், வளையும் தன்மை உடையவையாகவும் இருக்கும்.

  நரம்புகளாலும், தசைகளாலும், திசுக்களாலும் எலும்புகள் போர்த்தபட்டிருப்பதால், அவை முறியும்பொழுது பயங்கரமான் வேதனையும், வீக்கமும் உண்டாகும்.

     எலும்பு முறிந்து தோலைக் கிழித்துக்கொண்டு, வெளியே நீட்டிக் கொண்டிருந்தால் அது வெளிமுறிவு ஆகும். தோலைக் கிழிக்காமல் உள்ளேயே எலும்பு முறிந்திருந்தால் அது உள்முறிவு ஆகும். சிலசமயம் எலும்பு முறிவோடு மூட்டுக்களும் இடம் பெயர்ந்துவிட கூடும். தோள், கை, கால் மூட்டுக்கள் மற்றும் விரல் எலும்பு மூட்டுக்கள் இவ்வாறு இடம் பெயர்ந்து விடும்.
எலும்பு முறிவின் வகைகள்
1.  சாதாரண எலும்பு முறிவு
     எலும்பு மட்டும் உடைதலுக்கு "சாதாரண எழும்பு முறிவு" என்று பெயராகும்.

2.  கூட்டு முறிவு
   எலும்பு முறிந்து தோலைக் கிழித்து காயத்துடன் கூடியது, "கூட்டு முறிவு" ஆகும். இக் கூட்டு முறிவினால் முதலில் எலும்பு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால், தொற்று நோய்க் கிருமிகள் பற்றுவதற்கு வழியேற்படும்.

3.  நொறுங்கிப் போகும் முறிவு
  சிறு சிறு துண்டுகளாக நொறுங்கிப் போகும் வண்ணம் எலும்பு முரிந்ததென்றால், அது நொறுங்கிப் போகும் முறிவு ஆகும்.

4.  இளங்குருத்து முறிவு 
   இது பொதுவாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் முறிவு ஆகும். எக்ஸ்ரேயில் பார்த்தால் எலும்பு முழுவதும் உடைந்திருக்காது. ஆனால், எலும்பில் ஒரு பிளவு காணப்படும். 

5.  நோய் முறிவு
     நோய் மற்றும் பலவீனத்தின் காரணமாக எலும்பு தானாகவே முறிந்து விடுவதற்கு நோய் முறிவு என்று பெயராகும்.

எலும்பு முறிந்ததற்கான அடையாளங்கள்
  1. பாதிக்கப்பட்டவர் எலும்பு முறிந்த சத்தம் கேட்டதாக கூறலாம்.
  2. எலும்பு முறிந்த இடத்தில் பயங்கரமான வலி இருக்கும். முறிந்த பாகத்தை அசைத்தால் வலி அதைவிட தாங்க இயலாதா அளவுக்கு இருக்கும்.
  3. உடைந்த பாகத்தை பாதிக்கப்பட்டவரால் அசைக்க முடியாது.
  4. முறிந்த எலும்பு மற்றும் தசைப் பகுதியிலிருந்து இரத்தம் வருவதால் அந்த இடம் வீங்கிக் காணப்படும்.
  5. உடைந்த பாகம் பார்ப்பதற்கு வித்தியாசமாகத் தெரியும்

எலும்பு முறிந்தவருக்குச் செய்யவேண்டிய முதலுதவி
  1. முறிந்துபோன எலும்பின் நுனியும், அதன் அருகிலுள்ள மூட்டும் அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  2. தண்டு வடத்தில் அடிபட்டிருந்தால், பாதிக்கப்பட்டவரை அசைக்க கூடாது. 
  3. உடைந்த எலும்பு தோலுக்கு மேல் நீட்டிக் கொண்டிருந்தாள் அதை உள்ளே தள்ள கூடாது.
  4. இரத்தக் கசிவு அதிகமாக இருந்தால் முதலில் அதை நிறுத்த வேண்டும்.
  5. பாதிக்கப்பட்டவரை ஆசுவாசப்படுத்துங்கள். உடைந்த பாகத்தை உங்கள் கைகளால் தாங்கி அசையாமல் பிடித்துக் கொள்ளுங்கள்.
  6. உடைந்து போன பாகத்தை நன்றாக இருக்கும் பாகத்துடன் சேர்த்துக் கட்டி வைக்கலாம். உதாரணமாக, வலது காலில் முறிவு என்றால் அத இடது காலுடன் சேர்த்துக் கட்டுபோட்டு அசையாமல் வைத்திருக்க வேண்டும்.
  7. உடைந்த பகுதிக்கு ஆதாரமாக செய்தித் தாள்கள், புத்தகங்கள், அட்டைகள், துணிப்பந்துகளால் வைத்து கட்டலாம்.
  8. மூட்டு விலகி இருந்ததென்றால் மீண்டும் அதை பொருத்த ஒருபோதும் முயலாதீர்கள்.
  9. உணர்விழந்து கொண்டிருக்கின்றாரா என்று அடிக்கடி பார்த்துக் கொள்ளவும்.
  10. சாப்பிடவோ, குடிக்கவோ எதுவும் கொடுக்கக் கூடாது.

No comments:

Post a Comment