Tuesday 28 June 2022

தமிழக அரசின் ரூபாய் 1,000 உதவித்தொகை எந்த மாணவிகளுக்கு கிடைக்கும்

 

     உயர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் யார் யார் ரூபாய் 1,000 உதவித் தொகைக்கு விண்ணபிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

     இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதல் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூபாய் 1,000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.


இந்த திட்டத்தின் நோக்கம் : 

1. பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்.

2. குழந்தை திருமணத்தை தடுத்தல்.

3. குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்.

4. பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல்.

5. பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்.

6. உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கபடுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்தல்.

7. உயர் கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்.

8. பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல். 

9. இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமூதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல்.


 இத்திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள்:

1. மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் நாட்டில் உள்ள அரசு பள்ளிளில் படித்து தமிழ் நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.

2. தனியார் பள்ளிகளில் Right to Education - யின் கீழ் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற பின் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

3. அரசு பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நல பள்ளிகள், கள்ளர் சீர் மறபின பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தபட்டோர் நல பள்ளிகள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்பு துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

4. மாணவிகள் 8 அல்லது 10 அல்லது 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன் முறையாக உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

5. தொலைதூர கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைகழத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

     2022-2023 ம் கல்வியாண்டில், மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணைய தளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், முதலாம் ஆண்டில் இருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளும், தொழிற்கல்வியை பொருத்தமட்டில் முன்றாம் ஆண்டில் இருந்து 4ம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவ கல்வியை பொருத்த மட்டில் நான்காம் ஆண்டில் இருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

     2021-2022 ம் ஆண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயணடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. 


     திட்டம் குறித்து கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்-14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். இளநிலை கல்வி பெரும் அனைத்து மாணவிகளும் ( இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவிகளும், இளங்கலை / தொழிற்கல்வி / மருத்துவ கல்வியில் இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும் ) இத்திட்டத்திற்காக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in/ வழியாக தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தினத்தந்தி

No comments:

Post a Comment