Tuesday 24 January 2017

உறுதியான பழங்கால கலவை


   பழைய கால கட்டிடங்களின் வலிமை இப்போது புதியதாகக் கட்டப்படும் கட்டடங்களுக்கு இருப்பதில்லை. இதற்கு காரணம் பழங்கால கலவை முறைதான். இப்போது பயன்படுத்தப்படும் சிமெண்ட் கலவை நாட்கள் செல்லச்செல்ல பலவீனமாகும் தன்மை கொண்டவையாகும். ஆனால் சிமெண்ட் கண்டுபிடிக்காத காலத்தில் உருவான கலவை முறை நாட்கள் செல்லச்செல்ல உறுதியாகும் தன்மை கொண்டது.

   சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்ட கலவையும் இப்படிப்பட்டது தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்து நிற்கும் இதன் வலிமை ரகசியத்தை தெரிந்து கொள்ள சிஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் களத்தில் இறங்கினார்கள். அந்த ஆய்வில் சீனப்பெருஞ்சுவரின் உறுதித் தன்மைக்கு அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புகல் கலந்த சாந்து பொருள்தான் காரணம் என்று தெரியவந்தது. இந்த கலவையில் தாவரப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசியின் காஞ்சியில் ‘அமிலோபெக்டின்’ என்ற மாவுச்சத்து உள்ளது. சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவையை உருவாக்கும்போது, அரிசி காஞ்சியில் உள்ள ‘அமிலோபெக்டின்’ கலவைக்கு ஓட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும் சுவர்களில் விரிசல் ஏற்படாமலும் அதில் காளான், பூஞ்சை போன்றவை உருவாகாமலும் சுவரை பாதுகாக்கிறது.


   இந்த கலவையை கொண்டுதான் சீனபெருஞ்சுவரும், அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்டபின் பல்வேறு போர்களை சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால் இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போனது. மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அந்தே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

No comments:

Post a Comment