Saturday 20 May 2017

ஆந்த்ராக்ஸ் வைரஸ்கள் நிறைந்த தீவு


   உலகில் பல்வேறு தீவுகள் கைவிடபட்ட நிலையில் உள்ளன. பெரும்பாலும் இவை இயற்கை பேரழிவுகள், அணுசக்தி சோதனைகள் அல்லது நகர்புற நாகரீகத்தில் வாழ விரும்பி மக்களால் இவை கைவிடப்பட்டன. ஆனால் தற்பொழுது இவைகளில் பெரும்பாலானவை. மீண்டும் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் உள்ளனவாக மாறியுள்ளன.
   ஆனால் பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், கடந்த 75 ஆண்டுகளாக மக்கள் செல்ல அஞ்சும் ஒரு தீவை பற்றி இப்பொழுது பார்ப்போம். ஸ்காட்லாந்தில் உள்ளது க்ருய்நார்டு (GRUINARD) என்ற ஓவல் வடிவ தீவு. சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. இந்த தீவிற்கு வர மக்கள் யாருக்கும் தைரியம் இல்லை என்பதுதான் உண்மை.
   இரண்டாம் உலகப்போரின் போது பிரிடிஷ் ராணுவ ஆராய்ச்சியாளர்கள் இந்த தீவை ரசாயன ஆய்வக பரிசோதனைகளுக்கு பயன்படுத்திக் கொண்டனர். அக்காலக் கட்டத்தில் பிரிடிஷ் அரசாங்கம், ஆந்த்ராக்சை பயன்படுத்தி எதிரிகளை தாக்கக்கூடிய சாத்திய கூறுகளை பற்றி ஆலோசித்துவந்தது. ஆந்த்ராக்சின் நச்சு தன்மை வாய்ந்த இயல்பை கருத்தில்கொண்டு ஆந்த்ராக்ஸ் ஆயுத பரிசோதனை சமயங்களில் ஏற்படக்கூடிய பரவலான மற்றும் நீண்டகால மாசுபாட்டை குறைப்பதற்கு யாரும் வசிக்காத நீண்ட தூரம் உள்ள தீவு ஓன்று தேவைப்பட்டதால் க்ருய்நார்டு (GRUINARD) தீவை பயன்படுத்திகொண்டது பிரிடிஷ் அரசாங்கம்.
   1942-ம் ஆண்டு VALUME 14 578 என்ற கொடிய நச்சுத்தன்மை மிக்க ஆந்த்ராக்சை பரிசோதனை செய்தனர். அபாயம் மற்றும் பாக்டிரியா நிறைந்த குண்டுகளை பரிசோதனை செய்த காரணத்தால் இந்த க்ருய்நார்டு (GRUINARD) தீவு மிகமிக ஆபத்தாக மாறிவிட்டது. ஆந்த்ராக்சின் தாக்கம் அதிகரித்ததால் வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்டது. 1945-ம் ஆண்டு உலகப்போர் முடிவுக்கு வந்தபின் இந்த தீவின் உரிமையாளர் இதனை மீண்டும் வாங்க முயற்சி செய்தார். ஆனால் அதை நிராகரித்து விட்ட அரசாங்கம், தீவு மீண்டும் பாதுகாப்பான நிலைக்கு மாறியபிறகே அதை பற்றி முடிவு செய்யும் என அறிவித்துவிட்டது.
   பல்வேறுகட்ட ஆய்வுகள் மற்றும் தூய்மைபடுத்தும் முயற்சிக்குப் பின்னர் 1990-ம் ஆண்டு க்ருய்நார்டு தீவு மக்கள் வாழ தகுதியான இடமாக அறிவிக்கப்பட்டது. எனினும் சில ஆய்வாளர்கள் க்ருய்நார்டு தீவில் ஆந்த்ராக்சின் தாக்கம் முழுவதுமாக நீங்கவில்லை எனவும் அங்கு வாழ்வது அபாயத்தை விலைக்க கூடியது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆந்த்ராக்ஸ் பரிசோதனைகள் முடிந்து சுமார் 75 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் க்ருய்நார்டு தீவு பற்றிய அச்சம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

No comments:

Post a Comment