Sunday 29 April 2018

11 நபர்களை கொண்ட குட்டி நாடு


   உலகின் மிக சிறிய ராஜ்யத்தின் மக்கள் தொகை வெறும் 11 தான். இந்த ராஜ்யத்தின் அரசர் ஒரு உணவு விடுதியை நடத்தி வருகிறார். சாதாரண கால் சட்டை அணிந்து, ரப்பர் செருப்பு அணிந்து வாழ்ந்து வரும் அரசனின் ஆட்சிக்கு உட்பட்டது தான் டவோலாரா.

   இத்தாலியின் சர்தானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டி தீவுதான் டவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்த தீவின் ஒட்டு மொத்த பரப்பளவு வெறும் 5 சதுர கிலோமீட்டர் தான். இந்த தீவின் ராஜாவின் பெயர் அந்தோனியோ. டவோலாராவுக்கு சென்றால் அரசரை சந்திக்க அரசவைக்கு செல்ல வேண்டாம். எவ்வித முன் அனுமதியும் இல்லாமல், அரசரை சுலபமாக சந்தித்து விடலாம். ஆடம்பரம் இல்லாத இழப்பாக தோற்றம் அளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரே ஒரு உணவகத்துக்கு உரிமையாளர்.

   சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரிக்கு அழைத்து செல்பவரும் அரசர் தான். இந்த டவோலாரா ராஜ்ஜியம் மிகவும் சிறியதாக இருப்பதால், அதை நாடு என்று சொல்வது வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் அரசர் அந்தோனியோ தனது ராஜ்யத்தை பற்றி பெருமைபடுகிறார். இத்தாலியில் வசித்து வந்த அந்தோனியோவின் முப்பாட்டனார், குஷிப் பர்திநியோ என்பவர் ஒரே குடும்பத்தில் உள்ள இரண்டு சகோதிரிகளை திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது இத்தாலி என்பது தனி நாடு அல்ல. சர்திநியாவில் ஒரு பாகமாக இருந்த இத்தாலியில் இரண்டு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். எனவே அவர் 1807ம் ஆண்டு இத்தாலியில் இருந்து இந்த தீவில் குடியேறினார்.

   மேலும் இந்த தீவில் மின்னும் பற்களை கொண்ட ஆடுகள் உள்ளது. இந்த செய்தி இத்தாலி வரை சென்றதால், சர்திநியாவின் அரசர் கார்லோ ஆர்பட்டோ என்பவர் இந்த ஆடுகளை பார்க்கவும் மற்றும் வேட்டையாடவும்  டவோலாரா தீவுக்கு 1836 ம் ஆண்டு வருகிறார். அப்பொழுது கார்லோ ஆர்பட்டோ தன்னை சர்திநியாவின் அரசர் என அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் குஷேபின் மகன் பவோலோ நான் டவோலாராவின் அரசன் என அறிமுகம் செய்து கொண்டாராம். மேலும் கார்லோவுக்கு தீவு முழுவதையும் சுற்றி காட்டி, மின்னும் பற்களை கொண்ட ஆடுகளை வேட்டையாட உதவியும் செய்தார். தீவை மூன்று நாட்கள் சுற்றி பார்த்த அரசர் கார்லோ, நாடு திரும்பியதும் டவோலாராவை தனி நாடாக அறிவித்து சாசனம் எழுதிக் கொடுத்தார்.

   அதை தொடர்ந்து தன்னை புதிய ராஜ்யத்தின் அரசராக பவோலோ அறிவித்து கொண்டார். 1962 ல் நோட்டாவின் ராணுவ தளமாக மாறியபிறகு இந்த சிறிய ராஜ்யத்தின் இறையாண்மை முடிவுக்கு வந்துவிட்டது. பல இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் உலகின் எந்த ஒரு நாடும் டவோலாராவை ஒரு நாடாக ஏற்றுக் கொள்ள வில்லை. டவோலாராவின் அரசர் அந்தோணியாரும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவையை வழங்குகின்றனர்.

   உலகின் இங்கு மட்டுமே காண கிடைக்கும், தனி சிறப்பு கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுதை இனத்தையும், பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர். தீவு நாடான டவோலாராவின் தீவை சுற்றி இருக்கும் பல்வேறு வகையிலான கடல்வாழ் உயிரினங்கள் சுற்றுலா பயணிகளை கவர்கின்றன. சுற்றுல்லா பயணிகள் அதிகரித்து வருவதால் கணிசமான வருமானம் வருவதாக கூறும் அந்நாட்டு அரசர், சாதாரண வாழ்க்கை என்றும் சிறந்தது என்கின்றார். தினமும் காலையில் குடும்பத்தினரின் கல்லறைக்கு சென்று மலர் தூவி வழிபடுவது அந்தோநியாவுக்கு பிடித்தமான ஓன்று.

No comments:

Post a Comment