Wednesday 21 October 2020

இருமல் குணமாகும் - ஆடாதொடை

   ஆடாதொடை என்ற செடியை கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலையும், வெள்ளை நிற பூவையும் உடைய குறுஞ்செடி. வெளியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்பு சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும்.

     ஆடாதொடை இலையுடன் 5 குறுமிளகு சேர்த்து சாப்பிட்டால், ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும். என்று ஒரு பழமொழியுண்டு. இதனால், காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, ரத்த கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், நுண்ணிய புழுக்களை கொல்லும். மேலும் இது சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

    இலையின் ரசத்தை 10 முதல் 20 துளி வரை எடுத்து தேன் உடன் கலந்து சாப்பிட, வாயு, கபக்குற்றங்களின் பெருக்கை சமப்படுத்தியும், வாத தோஷங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்த கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும். இலையை உலர்த்தி சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்து வர இரைப்பு நோய் நீங்கும். ஆடா தொடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாறைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்பிசம், கப நோய்கள் குணமடையும். இலைச்சாறு 2 தேக்கரண்டி எடுத்தது எருமை பாலில் கலந்து காலை மாலை கொடுத்துவர சீதபேதி மற்றும் ரத்த பேதி குணமடையும்.

     ஆடா தொடை பூவை வதக்கி, இரு கண்களின் மீது வைத்து கட்டி வந்தால், கண்ணில் ஏற்பட்டுள்ள நோய்கள் குணமாகும். ஆடாதொடைப் பட்டையை நன்றாக இடித்து சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்து கொண்டு வெந்நீரில் 2 கிராம் கலந்து சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு போன்ற நோய்கள் நீங்கும்.

     ஆடா தொடை வேருடன் கண்டத்திரி வேர் சமளவு சேர்த்து இடித்து சலித்து, அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பனை பெண்களுக்கு கடைசி மாதத்தில் வேர் கஷாயத்தை காலை மாலை கொடுத்து வர, சுகப்பிரசவம் உண்டாக்கும்.

     ஆகவே, ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளின் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினால் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஒரு அற்புத மூலிகையாகும். 

No comments:

Post a Comment