Monday 2 July 2018

இரண்டு நாட்களில் தீர்ப்பு வழங்கும் இந்திய நீதிமன்றம்



   நீதி மன்றங்களுக்கு வரும் வழக்குகளை எல்லாம் விரைவாக விசாரித்து ஓன்று அல்லது இரண்டு தினங்களில் தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்கள் நம் தாய் திரு நாடான இந்தியாவில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் நம்பி தான் ஆக வேண்டும். நம் இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் நாகலாந்து மாநிலத்தில் தான் இந்த அதிசயம் நடக்கிறது.

    பழங்குடியினர் அதிகம் வாழும் இந்த நாகலாந்து மாநிலம், முன்பொரு காலத்தில் தனி நாடாக இருந்தது. பிறகு ப்ரிடிஷாரின் முயற்சியால் இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடியினர், தொடர்ந்து 40 ஆண்டுகள் போராடினார்கள் மேலும் 2 போர்களையும் சந்தித்தார்கள்.

    இறுதியில் 1963ம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் வெறும் 1 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதியான கொஹிமாவை தலைநகராக அறிவித்தனர். கொஹிமா பகுதியில் வாழும் தங்கள் பகுதியை தலைநகர் என்று கூறுவதை விட கிராமம் என்று கூறவே விரும்புகிறார்கள்.

    இந்த கொஹிமா பகுதியில் இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் தான் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை. இந்த நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நாள் அல்லது அடுத்த நாட்களில் தீர்ப்பு வழங்குகிறார்கள். திருமண பிரச்சனை, கடன், நிலத்தகராறு ஆகியவற்றை விசாரணை செய்கின்றனர். மேலும் வழக்கு விவரங்களை, யார் வழக்கு போட்டார்களோ அவர்களை வழக்குகளை எடுத்து கூறி வாதாடுகிறார்கள். 2௦௦ ரூபாய் செலுத்தினால் போதுமானது. அவசியம் ஏற்பட்டால் நீதிபதியே சம்பந்தபட்ட இடத்துக்கு சென்று நேரில் விசாரணை செய்கிறார்.

   இந்த மாநிலத்தில் மொத்தம் 16 வகையான பழங்குடியினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெவ்வேறு பழக்கவழக்கங்களை கொண்டுள்ளதால், அந்தந்த பழங்குடியினர்களின் மரபுப்படி தீர்ப்பு வழங்குகின்றனர். இந்த அனைத்து பழங்குடியினத்தவரின் மரபுகளை நன்கு அறிந்தவர்கள் மொத்தம் 2௦ நபர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தான் நீதிபதிகளாகவும் செயல்படுகின்றனர். இந்த நீதிபதிகள் யாரும் முறையாக சட்டம் பயின்று, வழங்கறிஞர்களாக இருந்து நீதிபதியானவர்கள் இல்லை. இவர்களை துபாஷிகள் என்று அழைகிறார்கள். ப்ரிடிஷார் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தவர்களின் வாரிசுகள் தான் இவர்கள். நாகலாந்தின் மாநில மொழி ஆங்கிலமாக இருந்தாலும், பழங்குடிகள் அனைவரும் “நாகாஷ்மி” என்ற வடிவம் இல்லாத மொழியையே பேசுகின்றனர்.

   ஒவ்வொரு பழங்குடியின் கிராம சபையும் தங்கள் முறைகளை நன்கு அறிந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து நீதிபதிகள் குழுவுக்குச் சிபாரிசு செய்கிறார்கள். அவர்களை கமிஷனர் நேர்முக தேர்வுக்கு அழைத்து, தேர்ந்தெடுத்து நியமிக்கிறார்.

No comments:

Post a Comment