Sunday 9 February 2020

சாதி எப்படி உருவானது, தமிழகத்தின் ஆண்ட பரம்பரை யார்?


    தமிழர்களிடையே சாதி என்ற தீ எப்போ உருவானது, கவுண்டர், நாடார், கள்ளர், மறவர், பள்ளர், அகமுடையார், ஆசாரி என அடுக்கடுக்கான சாதிகளின் வரலாற்று பின்னணி என்ன. சங்க காலத்தில் தமிழ் சமூகம் சாதிய முறையில் பிளவு பட்டு இருந்ததா. ஆண்ட பரம்பரை என மார் தாட்டி கொள்கிறார்களே, உண்மையில் தமிழ் நாட்டில் யார் ஆண்ட பரம்பரை. 

    சங்க காலத்தில் சாதிய பெயர் இருந்ததா என கேட்டால், இருந்தது என்பது தான் வரலாற்று உண்மை. 

"ஈன்று புறம் தருதல் என்தலை கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே
வேல் வடித்து கொடுத்தல் கொல்லர்க்கு கடனே"

    என சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் உண்டு. சங்க இலக்கியத்தில் கொல்லர்கள் இருந்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு வித்தியாசம். கொல்லர் என்பது பிறப்பு வழி சாதி அல்ல. தொழில் வழி சாதி. துடியன், பாணன், பறையன், கடம்பன் என நான்கு குடிகளாக தமிழர்கள் இருந்ததாக மாங்குடி மருதனார் புறநானுற்றில் பதிவு செய்கிறார். 

    தமிழர்களுடைய மரபு என்பது, செய்த தொழிலின் காரணமாக வந்த குடி மரபு. ஊரை காவல் காத்தவர்கள் காமிண்டவர்கள் இப்போது அவர்கள் கவுண்டர்கள். எதிரி நாட்டு படையை கள்ள தனமாக ஆராய்ந்து வருபவர்கள் கள்ளர்கள். அரண்மனையின் செயல்களை கவனிப்பவர்கள் அகமுடையார்கள். எதிர்த்து நின்று போராடுபவர்கள் மறவர்கள். மாணவர்களிடத்தில் ஆசு அதாவது குற்றம் இல்லாமல் செய்பவர்கள் ஆசிரியர்கள். மரத்தில் உள்ள ஆசினை நீக்குபவர் ஆசாரி. சங்க காலத்தில் சான்றோர் என்பதற்கு பொருள் வீரர். சான்றோர் தான் பிற்காலத்தில் சாணர் ஆனார்கள். குந்தம் என்றால் போர் கருவி, போர் காலங்களில் குந்தம் என்ற கருவியை ஏந்துவார்கள். ஒய்வு காலங்களில் குந்தம் என்ற போர் கருவியால், நெசவு செய்வார்கள் அவர்கள் தான் செங்குந்தர்கள். 

    சங்க காலத்தில் அப்பா எதிரி படையை உளவு பார்க்கும் கள்ளராக இருப்பார். மகன் ஊரை காவல் காக்கும் காமிண்டராக அதாவது கவுண்டராக இருப்பார். பேரன் மர வேலைகளை செய்யும் ஆசாரியாக இருப்பார். இது தான் தமிழ் சமூக சாதிய வரலாறு. தமிழ் சமூகத்தில் சாதி என்பது தொழிலை குறிக்கும், பிறப்பை குறிக்காது. பிறப்பு வழி சாதி என்பது 12ம் நூற்றாண்டில் இருந்து தான் தமிழ் சமூகத்தில் பரவ தொடங்கியுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

    நம் பண்பாடு என்பது திணை பண்பாடு. குறிஞ்சி நிலத்தில் நாம் வாழ்ந்த போது நமக்கு பெயர் குறவர்கள், வேடவர்கள், வேட்டுவர்கள், கானவர்கள். மலையில் இருந்து சாதுவான விலங்குகளை மட்டும் ஓட்டி கொண்டு கீழே வந்து, முல்லை நிலமான மேய்ச்சல் நிலத்தில் ஆடு மாடுகளை பார்த்து கொண்டு இருந்த போது, நமக்கு பெயர் கோனார், இடையர். முல்லை நிலத்திலேயே அரசு வந்துவிட்டது. முல்லை நிலத்தில் தான் தமிழர்களிடேயே வேலை பிரிவினையும் ஏற்பட்டதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிகிறார்கள். 

    மருத திணை மேட்டு பகுதியில் வீட்டை கட்டி கொண்டு பள்ளத்தில் நாம் வேலை பார்த்த போது நமக்கு பெயர் பள்ளர்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், உழவர்கள் என இலக்கிய பதிவான முக்கூடல் சான்று தருகிறது. நெய்தல் நிலம் என்பது நீர்வழி வணிகத்தை சார்ந்தது. கடலுக்கு பெயர் பறவை, அதில் இருந்தவர்களின் பெயர்கள் தான் பரதவர்கள். இப்படி தான் தமிழ் சமூகம் வேலையை அடிப்படியாக கொண்டு இயங்கியதாக இலக்கிய தரவுகள் தெரிவிக்கின்றன. 

    அப்படியென்றால் யார் தான் ஆண்ட பரம்பரை. ராஜ ராஜ சோழன் என்ன சாதி என்று கேள்விக்கு ஒற்றை பதிலை தான் தருகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். ராஜ ராஜன் காலத்தில் பிறப்பு வழி சாதியே இல்லை என்பது தான் அந்த பதில். அந்த பதிலை தான் கல்வெட்டுகளும் இலக்கிய தரவுகளும், நமக்கு சான்று தருகின்றன. தொல்காப்பியர் சொன்னதை போல, சிறப்புக்குரிய எந்த அடை மொழியும், பெயருக்கு முன்னாள் இருக்க வேண்டுமே தவிர பெயருக்கு பின்னால் இருக்க கூடாது. சாதி நம்மை பிரித்துவிடும், மதம் நம்மை பிளந்து விடும். மொழி தான் நம்மை இணைக்கும். தமிழர்களாய் ஓன்று கூடுவோம். தமிழால் வென்று காட்டுவோம்.

No comments:

Post a Comment